Chapter 1

بِسْمِ ٱللَّـهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1. ஏக-இறைவனின் பெயரைக் கொண்டு – சர்வ-வல்லவன், மிக்க-கருணையாளன்.

‘அர்-ரஹ்மான் (الرَّحْمٰنِ) என்ற சொல்லுக்கு பொதுவாக “அளவற்ற அருளாளன்” என்று மொழியாக்கங்களில் இருக்கும், குர்ஆனில் இவ்வார்த்தையின் பயன்பாட்டை கவனிக்கும் போது, அதிலிருந்து கிடைக்கும் உணர்வை “சர்வ-வல்லவன்” என்ற சொல்லால் இன்னும் நெருக்கமாக வெளிப்படுத்த முடிவதை உணர்ந்தேன்.

ٱلْحَمْدُ لِلَّـهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

2

புகழானது இறைவனுக்கே – அகிலங்களின் பரிபாலனன்.

‘ரப்’ என்ற அரபி வார்த்தை – ‘இறைவன்’, ‘இயக்குபவன்’, ‘எஜமான்’ போன்ற அர்த்தங்களை கொண்டதாக இருக்கிறது.

ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

3

சர்வ-வல்லவன் மிக்க-கருணையாளன்.

‘அர்-ரஹ்மான் (الرَّحْمٰنِ) என்ற சொல்லுக்கு பொதுவாக “அளவற்ற அருளாளன்” என்று மொழியாக்கங்களில் இருக்கும், குர்ஆனில் இவ்வார்த்தையின் பயன்பாட்டை கவனிக்கும் போது, அதிலிருந்து கிடைக்கும் உணர்வை “சர்வ-வல்லவன்” என்ற சொல்லால் இன்னும் நெருக்கமாக வெளிப்படுத்த முடிவதை உணர்ந்தேன்.

مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

4

மார்க்க நாளின் அரசன்.

‘யவ்மித் தீன்’ – ‘மார்க்க நாள் / தீர்ப்பு நாள்’ இதன் தெளிவு அத்தியாயம் 82 வசனம் 17,18,19’களில் காண முடியும்.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

5

உனக்கே சேவையாற்றுகிறோம், உன்னிடமே உதவிதேடுகிறோம்.

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

6

நேர்நிலையான பாதையில் எங்களை வழிநடத்துவாயாக.

சிராத்தல் முஸ்தக்கீம்’ – ‘நேர்நிலையான பாதை’ இதன் தெளிவு அதனை அடுத்து வரும் வசனத்திலேயே இருக்கின்றது. இன்னும் குர்ஆனில் பல இடங்களில் நமக்கு அழகிய முறையில் தெளிவுகள் கொடுக்கப் பட்டிருக்கின்றது. அதில் முக்கியமாக பார்க்க 6:151-153.

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

7

தங்கள் மீது உன் அருளை பெறும் பாதை; தங்கள் மீது கோபத்திற்கு ஆளாகாதது, வழிதவறியவையும் அல்ல.